சென்னை: திரைப்பட நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த்திற்கு கரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது.
இதையும் படிக்க.. 2023 - மின் வாகனங்களின் ஆண்டு? பெரும் பிரச்சினைகள்!
இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜயகாந்த் உடல் இன்று காலை மருத்துவமனையிலிருந்து அவரது சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக, கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டு வைக்கப்படவிருக்கிறது.
இந்த நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று அவரது மனைவி பிரேமலதா அறிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்த்தின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அவரிடம், விஜயகாந்த் உடலை பொதுவிடத்தில் அடக்கம் செய்ய முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.