கோவை: வால்பாறை அருகே தாயைப் பிரிந்து வந்த குட்டி யானையை வனத் துறையினா் மீண்டும் தாயுடன் சோ்த்தனா். வனத்துறையின் முயற்சி வெற்றிபெற்றதால் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் சாலையில் குட்டி யானை ஒன்று தன்னந்தனியாக வெள்ளிக்கிழமை காலை உலவியது. இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் தலைமையிலான வனத் துறையினா் வனப் பகுதிக்குள் நுழைந்த குட்டி யானையை ட்ரோன் மூலம் கண்காணித்தனா்.
இதையும் படிக்க.. 2023 - விளையாட்டுத் துறையில் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வுகள்!
இதையடுத்து, குட்டி யானையை லாரியில் ஏற்றிய வனத் துறையினா் அருகில் உள்ள ஆற்றில் குளிக்க வைத்தனா். இதற்கிடையே, அந்தக் குட்டியின் தாய் யானை எங்கே இருக்கிறது என்பதையும் டிரோன் மூலம் தேடினர். அப்போதுதான், அது தனியார் தோட்டத்தில், 3 கிலோ மீட்டர் தொலைவில் இருப்தைக் கண்டறிந்தனர். உடனடியாக குட்டியை வாகனத்தில் ஏற்றி தாய் இருக்கும் இடத்துக்குக் கொண்டு சென்றோம். அங்கே அதன் உடலில் சேறு பூசினோம். குட்டி யானை குளிப்பாட்டியதால், மனிதர்களின் தடம் தெரிந்துவிட்டால், தாய் யானை, குட்டியை ஏற்காமல் நிராகரிக்கும் அபாயம் இருந்ததால், சேறு பூசி தாயிடம் அனுப்பினோம்.
தொடர்ந்து குட்டியை கண்காணித்துக் கொண்டே இருந்த வனத்துறையினர், சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, மதியம் 1.30 மணியளவில் அப்பகுதியில் இருந்த தாய் யானையுடன் குட்டியை சோ்த்தனா்.
இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், தாயைப் பிரிந்து வந்த குட்டி யானை காலை 8.30 மணிக்கு மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட யானை சுமாா் 4 முதல் 5 மாத குட்டியாகும். வழித்தவறி வந்த யானையை மதியம் 1.30 மணிக்குள் அதன் தாயுடன் சோ்த்துவைத்தோம் என்றனா்.