தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு அருகே வேன் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆன்மீக சுற்றுலா வந்த 3 பேர் பலியாகினர் என்று காவல்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம், சாரம்பூர் மாவட்டம், ரக்நாத் பகுதியில் இருந்து ஆன்மீக சுற்றுலா ரயிலில் ராமேசுவரம் வந்தவர்கள், அங்கிருந்து கன்னியாகுமரி செல்வதற்காக வேனில் தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வல்லநாடு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த டிப்பரி லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சுமன்(32), பார்வதி(40), ஸ்ரீ என்கிற 1 வயது பெண் குழந்தை ஆகிய 3 பேர் பலியாகினர், 17 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பாடு போலீசார் உடல்களை மீட்டு உடல் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.