ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு பரிசீலனையில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அதே வேளையில் அமமுக வேட்பாளரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தமாக 96 நபர்கள் 121 மனுக்களை தாக்தல் செய்திருந்தனர்.
வேட்பு மனு பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டரங்கில் தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார்யாதவ் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் வேட்பு மனுக்களை பரிசீலித்து நிலையை அறிவித்தனர்.
இதையும் படிக்க | அரசு நூலகங்களில் வேலை வேண்டுமா? டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!
இதில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் மனுவும் ஏற்கபட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் 2 மனுக்களும் முன்மொழிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் மனு நிராகரிக்கப்பட்டது.
மொத்தத்தில் 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், 16 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 80 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 121 வேட்பு மனுக்களில் 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.