ஆறு வழிச்சாலைப் பணிகளை விரைவுபடுத்துக: மத்திய அமைச்சர் கட்கரிக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்திட வேண்டும் - சாலைகளை நல்ல நிலையில் பராமரித்திட வேண்டும்
மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)


தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்திட வேண்டும் - சாலைகளை நல்ல நிலையில் பராமரித்திட வேண்டும்  மத்திய அரசின் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பினையும் தமிழ்நாடு அரசு வழங்கும் எனத் தெரிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்குக் கடிதம் எழுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்குக் கடிதம் எழுத்தியுள்ள கடிதத்தில்,  சென்னையில் இருந்து ராணிப்பேட்டை (என்எச்-4) வரை இருக்கும் சாலையின் நிலையை மேம்படுத்திட வேண்டுமென தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கையைக் குறிப்பிட்டு, இந்தச் சாலை சென்னை நகரம் மற்றும் அதன் துறைமுகங்களில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய இணைப்பை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். 

இந்தச் சாலையின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அதன் காரணமாக, சமீபத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு, தான் இரயிலில் செல்ல நேரிட்டதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்வர், இந்தச் சாலை தொடர்பான தங்களது நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை முக்கியமானதாக இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அளித்துள்ள பொதுவான மற்றும் உறுதியற்ற பதிலால் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகக்  குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும், குறிப்பாக, சென்னை துறைமுகம் முதல், மதுரவாயல் வரையிலான உயர்மட்ட விரைவுச் சாலைத் திட்டத்திற்கு, சாத்தியமான எல்லா உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்குவதன் மூலம் அந்தத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளதாகவும், கடந்த காலத்தில் வழங்கப்படாத பல்வேறு சலுகைகள் மற்ற பெரிய என்எச்ஏஐ திட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதைக் கண்காணிக்க மாநிலத் தலைமையகத்தில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், வனத் துறை அனுமதி பெறப்படுவது தொடர்பாக அவ்வப்போது ஆய்வு செய்யப்படுவதாகவும், தான் அறிந்தவரையில், எந்தவொரு பெரிய என்எச்ஏஐ திட்டமும் அத்தகைய அனுமதிகளுக்காக நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள முதல்வர், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் குவாரி மண் எடுக்க அனுமதி வழங்குதல் போன்றவற்றில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்கொள்ளும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக தலைமைச் செயலாளர் மட்டத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொருட்களுக்கான விலை, உரிமத் தொகை மற்றும் தீர்வை வரிக் கட்டணத்தை தள்ளுபடி செய்வது, இலவசமாக மண் எடுக்க அனுமதி போன்ற மற்ற கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாடு அரசு இத்தகைய நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், மாநில அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஒத்துழைக்கவில்லை என்பது போன்ற தோற்றம், ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலால் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள முதல்வர் அவர்கள், அது உண்மையல்ல என்றும், மாநில மற்றும் மத்திய அரசுகளால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டாமல், அனைத்து முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் விரைவுபடுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் குறிப்பிட்ட கோரிக்கையைப் பரிசீலிக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வழங்கிட வேண்டுமென்று குறிப்பிட்டுள்ள அவர், தேசிய நெடுஞ்சாலை-4-ல், ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில், ஆறு வழிப்பாதைப் பணி நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்ததாரர்களுக்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப் பிரச்னையால் பணிகள் கிடப்பில் போடப்பட்டு, தற்போதுள்ள சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2020-டிசம்பர் மாதம், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சின்னசமுத்திரம் சுங்கச்சாவடிகளில் இதுபோன்ற மோசமான பராமரிப்பு காரணமாக சுங்கச்சாவடி கட்டணத்தை 50 விழுக்காடாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது என்று சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், சாலைகளின் மோசமான நிலைமை, பயணர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஆகியவை, சிறப்பாகச் செயல்பட்டுவரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் (என்ச்-4) ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்தவும். சாலைகளை நல்ல நிலையில் பராமரிக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, மத்திய அரசின் திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com