மேட்டூர் அருகே பாலாற்று எல்லையில், கர்நாடக வனத் துறையினர் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் மீனவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், கர்நாடக வனத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மீனவரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியில், தமிழக மீனவர்கள் காவிரியும், பாலாறும் கலக்கும் இடத்தில் பரிசலில் சென்று மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்ற மீனவர்கள் பாலாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் சிலர் தப்பி கிராமங்களுக்கு சென்று விட்டனர். ஆனால், கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜாவை காணவில்லை.
இதனிடையே அடி பாலாறு பகுதியில் மீனவர் ராஜாவின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
உடற்கூராய்வு முடிந்த நிலையில், மீனவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மீனவரை சுட்டுக் கொன்ற வனத் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மீனவரின் உறவினர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.