குடிசையில்லா நகரங்களை உருவாக்க வேண்டும் என்றும், எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் கொள்கைகளை வகுத்து வருவதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியின் இலக்குகள் பெரிதாக இருப்பதால், முயற்சியையும் பெரிதாக எடுத்து வருகிறோம்.
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து வெளியிட்டுள்ளோம்.
குடிசையில்லா நகரத்தை உருவாக்கும் முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பே குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது. குடிசையில்லா நகரங்களை உருவாக்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக விளங்குவதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வருவாய் குறைவாக உள்ள மக்களுக்கு வீட்டு வசதி கழகத்தின் சார்பில் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
1991ஆம் ஆண்டு 1.90 கோடியாக இருந்த நகர மக்கள் தொகை 2011ல் 3.41 கோடியாக அதிகரித்தது. 2031ஆம் ஆண்டு 5.31 கோடியாக உயரும்.
2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரம் ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.