மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ததைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கோவைக்கு புறப்பட்டார்.
அப்போது சாமி தரிசனத்துக்காக ஆவணிமூல வீதியில் காத்திருந்த மக்களை பார்த்ததும் அங்கிருந்து காரில் இறங்கி மக்களை நோக்கி கையசைத்தார். அருகில் சென்று மக்களுக்கு வணக்கம் செலுத்தினார். மக்களும் ஆரவாரத்துடன் கையசைத்தனர்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்தார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழகம் வந்துள்ள திரெளபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
திரெளபதி முர்மு வருகையையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முழுக்க காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. காவல் துறையின் பாதுகாப்புக்கு மத்தியில் திரெளபதி முர்மு கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்து, கோயில் வளாகத்தை சுற்றிப் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து மதிய உணவு எடுத்துக்கொண்ட பிறகு மதுரையிலிருந்து புறப்பட்டார். சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு செல்லவுள்ளார். அங்கு இன்று மாலை நடைபெறும் சிவராத்திரி விழாவில் அவங் பங்கேற்கவுள்ளார்.