இது தான் ராஜ்பவன் பட்டறையில் பெற்ற பயிற்சியா? தமிழிசைக்கு சு. வெங்கடேசன் கேள்வி

இதுதான் ராஜ்பவன் பட்டறையில் பெற்ற பயிற்சியா? என்று ஆளுநர் தமிழிசைக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்
நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்


சென்னை: இதுதான் ராஜ்பவன் பட்டறையில் பெற்ற பயிற்சியா? என்று ஆளுநர் தமிழிசைக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் தமிழிசைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அளித்திருக்கும் பதிலில், நீங்கள் மக்களை கேவலப்படுத்தியதால் அந்த கேள்வி வந்தது தமிழிசை அவர்களே. 

நான் டுடோரியலை  கேவலமாக சொல்லவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.  மக்கள் பெயில் ஆக்கினாலும் பிரதமர் பாஸ் போட்டு நாங்கள் ராஜ் பவனில் உட்கார்ந்து விடுவோம் என்பதே இறுமாப்பு. அதுவே கேள்வி. கேள்வியை விட்டு விட்டு வேறு ஏதாவது பதில் பேசினால் கூட பரவாயில்லை.  எந்த தரத்திற்கு இறங்கி பேசியுள்ளீர்கள்?  இது தான் ராஜ்பவன் பட்டறையில் பெற்ற பயிற்சியா தமிழிசை அவர்களே! என்று சு வெங்கடேசன் பதிலளித்துள்ளார்.

அண்மையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், 'தமிழக மக்கள் எங்களின் திறமையை அங்கீகரிக்கவில்லை, பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எங்களின் திறமையைக் கண்டு ஆளுநராக ஆக்கியிருக்கிறார்கள்' என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருந்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், 'ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா?. பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா?' என ட்விட்டரில் தமிழிசைக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு ஆளுநர் தமிழிசை அளித்த பதிலில்,  ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார்....

டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல...அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான்... டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள் - தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல.

தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது...

ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம்...
அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே....
நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம்...
நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம்...
இறுமாப்பு வேண்டாம்...
ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும்...
அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை...
மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம்.... என்று பதிலளித்திருந்தார்.

இந்த பதிலுக்குத்தான், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது மறுபதிலை வெளியிட்டிருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com