மங்கல சனீஸ்வர பகவான் ஆலயமாகப் போற்றப்படும் திருநறையூர் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநறையூர் கிராமத்தில் பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயிலில் சனி பகவான் உஷா தேவி - ஜெஷ்ட்டா தேவி என இரு மனைவிகள், மாந்தி - குளிகன் என இருமகன்களுடன் தனி சன்னதி கொண்டு மங்கள சனி பகவானாக அருள்பாலித்து வருகிறார்.
இவ்வாலயத்தில் உலக மக்கள் நலம் பெற வேண்டி தசரத சக்கரவர்த்தி வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு சிறப்புடைய இவ்வாலயத்தில் மகா கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 22ம் தேதி புதன்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, புனிதநீர் கொண்டு வருதலுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவில், மகா பூர்ணாஹதியும், அதனைதொடர்ந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள், நந்தி வாத்தியங்கள் முழங்கக் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், விமான கோபுர கலசங்களுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், சிவாச்சாரிகள் புனித நீர் நிரப்பிய கடங்களில் இருந்த புனித நீரை ஊற்ற, மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பிறகு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.