
2019-20ல் கலைமாமணி விருது வழங்கியது தொடர்பாக தேவைப்படும்பட்சத்தில் புதிய தேர்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
2019-20 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது தகுதியில்லாத பலருக்கு அவசரகதியில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை ஆய்வு செய்து தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளை திரும்பப் பெறக்கோரி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
முந்தைய விசாரணையில், நீதிபதிகள் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், 2019-20 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது தகுதியானோருக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் இன்றைய விசாரணையில், 2019-20 ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தேவைப்படும் பட்சத்தில் புதிய தேர்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
2019-20 ஆம் ஆண்டு விருது பெற்றவர்களின் தகுதி குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.