
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிச. 12 முதல் 14ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனையொட்டி சென்னையில் 6 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் சென்றுவரும் வகையில், போக்குவரத்துத் துறை சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் மாதவரம், கே.கே. நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலையம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்கான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த பேருந்து நிலையங்களில் எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1. மாதவரம் புதிய பேருந்து நிலையம்: செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.
2. கே.கே. நகர் பேருந்து நிலையம்: இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்
3. தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்: திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்
4. தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்: திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
5. பூவிருந்தவல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம்: (பூவிருந்தவல்லி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அருகில்) வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.
6. புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு: மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அதாவது,
மயிலாடுதுறை, அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு.
24 மணிநேர கட்டுப்பாட்டு அறை:
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044-24749002, 044- 26280445, 044-26281611 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (Toll Free Number) தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும்
செயல்படும்.
இணைப்புப் பேருந்துகள்:
பொதுமக்களின் வசதிக்காக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து (கோயம்பேடு மேற்கூறிய) 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.