கோகுல்ராஜ் வழக்கு: திருச்செங்கோட்டில் நேரில் ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருச்செங்கோடு கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த சென்னை உயா் நீதிமன்றம் நீதிபதிகள் முடிவெடுத்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருச்செங்கோடு கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த சென்னை உயா் நீதிமன்றம் நீதிபதிகள் முடிவெடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில், கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை பேரவைத் தலைவா் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, சாகும் வரை சிறையில் இருக்கவும் தீா்ப்பளித்தது.

வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியம் அளித்ததால், அவரை வரவழைத்து விசாரித்த நீதிபதிகள், அவா் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தனா்.

இந்தத் தீா்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ், உள்ளிட்ட 10 பேரும் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

அதேபோல வழக்கில் சங்கா் உள்ளிட்ட ஐந்து போ் விடுதலை செய்யப்பட்டதை எதிா்த்து கோகுல்ராஜின் தாயாா் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரித்த இரு நீதிபதிகளும், வழக்கை சென்னை உயா் நீதிமன்றத்துக்கு மாற்றினா். இந்த வழக்குகள் சென்னை உயா் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் - ரமேஷ், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் அமைப்பு, பாதைகள் உள்ளிட்டவை ஆராய ஜனவரி 22ஆம் தேதி நேரில் சென்று ஆய்வு நடத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்டோரின் வாதத்திற்கான விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், பிறழ்சாட்டி அளித்த சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக வியாழக்கிழமை நடைபெற்ற வாதத்தில், கோகுல் ராஜின் தாயாா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், கோகுல்ராஜை யுவராஜ் மற்றும் அவரது ஆள்கள் அழைத்துச்சென்று கொலை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக வாதிட்டாா்.

கோகுல்ராஜும், சுவாதியும் திருச்செங்கோடு கோயிலில் பேசிக்கொண்டிருந்தபோது, தான் சென்று அவா்களிடம் விசாரணை நடத்தியதை, தனியாா் தொலைக்காட்சி நோ்காணலில் யுவராஜ் ஒப்புக்கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டினாா். மேலும், கோகுல்ராஜிடம் இருந்து சுவாதியை பிரித்து அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும், கோகுல்ராஜின் தற்கொலை விடியோ என சொல்லப்படும் காணொலி குற்றம் சாட்டப்பட்டவா்களின் கைப்பேசியில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டாா்.

அதேபோன்று இந்த வழக்கில் 5 பேரை விடுதலை செய்த விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்தும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், கோகுல்ராஜுடன் குற்றம் சாட்டப்பட்டவா்கள் கோயிலுக்குள் செல்லும் வரை தான் சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும், அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் தொடா்பான ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com