கையடக்கக் கருவிகள் மூலம் கோயில்களில் கட்டணச் சீட்டை வழங்கும் முறையை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இன்று தொடக்கி வைத்தார்.
இதன் மூலம் கட்டணச் சீட்டை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அதிலுள்ள கியூஆர் குறியீட்டினை (QR) முன் ஆய்வு கருவி மூலம் ஒளி நகல் (Scan) ஏற்படுத்தும் வசதியை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கான கட்டண சேவை வசதியினை எளிமைப்படுத்தவும் மற்றும் கட்டண சீட்டு மையங்களில் கூட்டத்தினை கட்டுப்படுத்தவும் பக்தர்களிடமிருந்து சேவைக்கான கட்டணத்தை ரொக்கமாக பெற்றுக்கொண்டு கையடக்க கருவிகள் (PoS) மூலம் கட்டண சீட்டுகள் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முத்லே கோயில்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களுக்கான சேவையை மேலும் விரைவுபடுத்தும் வகையிலும், மின்னணு பணப் பரிமாற்றத்தினை ஊக்குவிக்கும் வகையிலும், கடன் அட்டை, பற்று அட்டை, யூபிஐ பரிவத்தனைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 530 திருக்கோயில்களில் 1767 கையடக்க கருவிகள் மூலம் கட்டணச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.