பழனி கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

பழனி கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். 
அமைச்சர் சேகர் பாபு(கோப்புப்படம்)
அமைச்சர் சேகர் பாபு(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

பழனி கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது, திருவிடைமருதூர் தொகுதி திமுக எம்எல்ஏ கோவிசெழியன், ராமநாதசாமி கோயில்('நாச்சியார் கோயில்) குடமுழுக்கு குறித்து கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, ரூ. 12 லட்சம் செலவில் 8 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 3 மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும் என்றும் தெரிவித்தார். 

இதன்பின்னர் பழனி கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, 'பழனி கோயிலில் வருகிற 27 ஆம் தேதி குடமுழுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக பழனி கோயில் குடமுழுக்கிற்கு முழுக்க முழுக்க பத்திரிகை, தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது.  

தமிழனின் பெருமையை பறைசாற்றும் வகையில் 100-க்கும் மேற்பட்ட ஓதுவார்களை வைத்து தமிழிசை வேத மந்திரங்கள் ஒலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திமுக அரசு பதவியேற்ற பிறகு தமிழை வளர்த்து வருகிறது. 

திமுக ஆட்சியில் தேவாரமும் திருவாசகமும் அனைத்து கோயில்களிலும் ஒலிக்கின்றன. 100க்கும் மேற்பட்ட ஓதுவார்களை நியமித்து திருமூலத்திற்கு நிகரான வேத மந்திரங்கள் கோயில்களில் ஒலிக்கின்றன. 

பழனி கோயில் குடமுழுக்கிலும் ஆகம விதிப்படி தமிழில் மூல மந்திரங்கள் ஓதப்படும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com