மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருதுகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்களுக்கு  தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். 

News image
Updated On :16 ஜனவரி 2023, 8:02 am

DIN

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்களுக்கு  தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். 

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் மொழி  மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்கள் 10 பேர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.  

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தைத்திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாள் எனக்  கடைப்பிடிக்க ஆணையிட்டார். மேலும், சென்னையில் வள்ளுவர்  கோட்டம் உருவாக்கப்பட்டதோடு,  கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, திறந்தும் வைக்கப்பட்டது. கருணாநிதியின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்மொழியானது 2004-ஆம் ஆண்டு மத்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும், தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'மகாகவி நாளாகக்' கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தியது, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி விருது” என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை  இரணியன் நா.கு.பொன்னுசாமி, 2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதினை  சி.நா.மீ. உபயதுல்லா, பெருந்தலைவர் காமராசர் விருதினை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,  மகாகவி பாரதியார் விருதினை முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி, பாவேந்தர் பாரதிதாசன் விருதினைவாலாஜா வல்லவன், திரு.வி.க. விருதினை நாமக்கல்
பொ. வேல்சாமி, கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை கவிஞர் மு.மேத்தா, செந்தமிழ்ச்  சொற்பிறப்பியல்  அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் தேவநேயப்பாவாணர் விருதினை முனைவர் இரா. மதிவாணன் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி, சிறப்பித்தார். இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது. 

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதினை கவிஞர் கலி.பூங்குன்றன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதினை எஸ்.வி. ராஜதுரை ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார். இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா 5 இலட்சம் ரூபாய், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்  துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மரு. நா. எழிலன், த. வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்  துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.