ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் வலது கை பாதிப்பு: மருத்துவர்கள் செவிலியர்கள் அலட்சியம்? 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தையின் வலது கை பாதிப்படைந்துள்ள நிலையில், இதற்கு மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியமே காரணம்
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் வலது கை பாதிப்பு: மருத்துவர்கள் செவிலியர்கள் அலட்சியம்? 

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தையின் வலது கை பாதிப்படைந்துள்ள நிலையில், இதற்கு மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தையின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். 

ராமநாதபுரம்  மாவட்டம் தொண்டி பகுதியைச்  சேர்ந்தவர் தஸ்தகீர்-  அஜிசா தம்பதியினர்.  

இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஒன்றரை வயது குழந்தையான முகமது மையூர் தலையில் வீக்கம் அதிகமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

இதையடுத்து அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, குழந்தையின் வலது கையில் ரத்தக்குழாய் வழியாக ஊசியின் மூலம் மருந்து 'ட்ரிப்ஸ்' போட்டுள்ளனர். 'ட்ரிப்ஸ்' போட்டவுடன் ஒரு சில நிமிடங்களில் குழந்தையின் கை கருநீளமாக மாறியதுடன் செயலிழந்துள்ளது. 

இதுகுறித்து பெற்றோர்கள் செவிலியர்களிடம் கூறிய போது குழந்தையின் கையை நன்றாக தேய்க்கும் படி கூறியுள்ளதாகவும், மருத்துவர் ஒருவர், ஆயில்மெண்ட்  எழுதிக் கொடுத்தார். அது மருத்துவமனையில் இல்லை என்பதால் வெளியே இருந்து வாங்கி வந்து பயன்படுத்தியும் பயன் இல்லை. 

இந்த நிலையில் குழந்தையின் வலது கையை அகற்ற வேண்டும் என எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது குழந்தையின் கை அழகிய நிலையில் இருப்பதாக எழும்பூர் மருத்துவர்கள் அதிர்ச்சியான தகவலை தெரிவித்தனர்.

இதுகுறித்து தஸ்தகீர்-  அஜிசா தம்பதியினர்  பூக்கடை காவல் நிலையத்தில் புகார் தெரித்த போது, பூக்கடை காவல் நிலையம் ஆய்வாளர் மகேஸ்வரி, இது எல்லாம் சகஜம்தான் என அலட்சியமாக பதில் அளித்ததாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், குழந்தைக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது கண்டிப்பாக  முயற்சிக்கலாம் என தெரிவிக்கின்றனர் தவிர, கண்டிப்பாக சரி செய்து விடலாம் என சரியான பதில் அளிக்கவில்லை என கண்ணீருடன் தெரிவித்த பெற்றோர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இது எல்லாம் சகஜம் தான் என அலட்சியமாக பதிலளித்த பூக்கடை காவல் நிலையம் ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்படும் 
இதுகுறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறியதாவது: குறை பிரவசத்தில் குழந்தை பிறந்ததால், சில பிரச்னைகள் இருந்துள்ளது. அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

மேலும், சிலரின் கவனக்குறைவால் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தால் விசாரித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேரணிராஜன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com