தக்காளி விலையேற்றத்தை விஞ்சும் துவரம் பருப்பு விலை!

மிளகாய் தூள், சர்க்கரை, மிளகாய் உள்ளிட்டவைகளின் விலையும் அதிகரித்துள்ளது. 
தக்காளி விலையேற்றத்தை விஞ்சும் துவரம் பருப்பு விலை!

தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருவதைப்போன்று, துவரம் பருப்பு விலையும் தற்போது அதிகரித்துள்ளது. 

வரத்து குறைந்து, தேவை அதிகரித்துள்ளதால், துவரம் பருப்பின் விலை உயர்ந்துள்ளது. ஒருசில நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் விளையும் பொருள்களின்றி, பொதுமக்களின் தேவை கருதி ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் மளிகை பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. 

எனினும் இந்தப் பருவத்தில் அண்டை மாநிலங்களிலும் விளைச்சல் குறைந்திருப்பதால், தமிழகத்திற்கு வரும் மளிகை பொருட்கள் அளவு குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக உணவுப் பொருட்களின் விலை 20 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. 

குறிப்பாக துவரம் பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.90-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.140 - ரூ.170 வரை விற்பனையாகிறது.

வரத்து குறைவால் ஒருசில ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கவில்லை எனவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தக்காளி விலை கடந்த சில நாள்களாக உயர்ந்து பொதுமக்களை வாட்டியெடுத்த நிலையில், தற்போது துவரம் பருப்பு விலையும் கிட்டத்தட்ட இரு மடங்காகியுள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் கவலையடைந்துள்ளனர்.

தக்காளி, துவரம்பருப்பு மட்டுமின்றி, மிளகாய் தூள், சர்க்கரை, மிளகாய் உள்ளிட்டவைகளின் விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com