காஞ்சிபுரம் அருகே கல்லூரிக்குச் சென்ற முதல் நாளே வாகன விபத்தில் சிக்கி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த ராஜன் என்பவரது மகனான ரா.தம்பிதுரை சிறு வயது முதலே காஞ்சிபுரம் ஏனாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனது பாட்டியின் வளர்ப்பில் இருந்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் பிளஸ் டூ முடித்த நிலையில், காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு இளங்கலை அறிவியல் வகுப்பில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் இன்று முதல் நாள் கல்லூரிக்கு சென்று விட்டு கல்லூரிக் கட்டணமும், கட்டிவிட்டு வருவதாக தனது மாமாவிடம் கூறிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுள்ளார்.
கல்லூரிக் கட்டணத்தை கட்டிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது, எதிரே வந்த மினிலாரி இருசக்கர வாகனத்தின் மீதி மோதியதில் தம்பிதுரை நிலை தடுமாறி சாலையில் விழுந்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அருகில் இருந்த கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தும், காவல் துறைக்கு வாகன விபத்து தொடர்பான தகவல் அளித்தனர்.
108 வாகனம் விரைவாக வந்து அவரை பரிசோதித்த நிலையில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே அவர் பலியானதாக தெரிவித்துள்ளனர்.
வாகன விபத்து குறித்து பாலு செட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரது உடலை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரிக்குச் சென்ற முதல் நாளே வாகன விபத்தில் சிக்கி பலியான சம்பவம் கல்லூரி மாணவர்களுடைய அதிர்ச்சியும் அவரது உறவினர்களும் பெருத்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில் போராட்டம்: 19 விவசாயிகள் கைது!
தம்பிதுரை பிளஸ் டூ விடுமுறை காலத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியை பகுதி நேரமாக செய்து கொண்டு கல்வி பயில விரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.