திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் ரூ.31.57 கோடியில் அனைத்து வசதியுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க பூமிபூஜை நடந்தது. ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பூமிபூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தனர்.
உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டம் மூலம் திருவள்ளூர் நகராட்சி ரூ. 31.57 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் அடுத்த வேடங்கிநல்லூரில் பூமி பூஜை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையும் படிக்க | கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பூமிபூஜையில் பங்கேற்று கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:
இந்த பேருந்து நிலையம் அடுத்தாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன. பழைய பேருந்து நிலையத்தில் 13 பேருந்துகள் மட்டுமே நிறுத்தப்படும். ஆனால் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்தில் 56 பேருந்துகள் நிறுத்தம் செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு 109 கடைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.