திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
ஜார்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக முதல்முறையாக திருப்பூரில் உள்ள தனது இல்லதுக்கு வருகை புரிந்தார்.
இதன் பின்னர் கோவை, சேலம், பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தூய்மைப்பணிகள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் பாளையக்காடு பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் பி.செந்தில்வேல் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தூய்மைப்பணியாளர்கள் 100பேருக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 6 வகையான காய்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, 20 பெண்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் இலவச எரிவாயு உருளைகளையும், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 20 பெண்களுக்கான அஞ்சல் கணக்குகளையும் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் கார்த்திக் செய்திருந்தார்.