திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.முத்தமிழ்ராஜ் தலைமை வகித்தார். இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது:
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளபடி சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 ஐ உடனடியாக வழங்க வேண்டும். சமூக நலத்துறை அமைச்சர் உண்ணாவிரதக் கூட்ட அமர்வில் ஒப்புக்கொண்ட மருத்துவக் காப்பீடு, ஈமச்சடங்கு நிதி ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். சமூக நல இயக்குநர் அப்ரகாம் உத்தரவின்படி, ஓய்வுகாலப் பலன்களை ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் சிவபாக்கியம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ், துணைத் தலைவர் ஜெயபால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.