முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்வு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 120 அடியாக உயர்ந்தது.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்வு

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 120 அடியாக உயர்ந்தது.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு இல்லாத நிலையிலும், செவ்வாய்க்கிழமை அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தது.

அணை நிலவரம்
அணையின் நீர்மட்டம் 120 அடி (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீர் இருப்பு 2,268 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 778.34 கன அடியாகவும், நீர் தமிழக பகுதிக்கு வெளியேற்றம் விநாடிக்கு 356 கன அடியாகவும் இருந்தது. நீர் பிடிப்பு பகுதிகளான தேக்கடியில் 1.6 மில்லி மீட்டர் மழையும், பெரியாறு அணையில் 1.2 மி.மீ., மழையும் பெய்தது.

குறைந்தது மழை, நீர் வரத்து
தென் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த சில நாள்களாக பெய்து கொண்டிருந்த பருவமழை கடந்த 3 நாள்களாக குறைந்து வந்தது. அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் ஞாயிற்றுக்கிழமை 12 மில்லிமீட்டர் மழையும் தேக்கடி ஏரியில் 8.6 மி.மீ., மழையும் பெய்தது. நீர் வரத்து வினாடிக்கு 1,504.58 கன அடியாக இருந்தது.

மறுநாள் திங்கள்கிழமை பெரியாறு அணையில் 0.2 மி.மீ., தேக்கடி ஏரியில் 0.8 மி.மீ. மழை பெய்தது. அதேபோல் நீர்வரத்தும் 867.91 கன அடியாக வந்தது.

இதுபற்றி அணையின் தேக்கடி பிரிவு பொறியாளர்கள் கூறும்போது, தென்மேற்குப் பருவமழை வலுவிழந்துள்ளதால் மழை குறைந்து வருகிறது. மேலும் தொடர்ந்து கேரள மாநிலம் மலபார் பகுதியில் மழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை பெய்யும் என்று தெரிகிறது. அப்போது நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது என்றார்.

முதல் போக சாகுபடி தீவிரம்
அணையில் போதுமான அளவு நீர்மட்டம் இருந்து, கம்பம் பள்ளத்தாக்கு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் விநாடிக்கு 356 கன அடி திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் முதல் போக நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜூன் மாதம் தண்ணீர் திறக்க வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி 120 நாட்களுக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்றார், ஆனால் 150, 200, 250 என்ற அளவில் திறக்கப்பட்டு தற்போது வரை 356 கன அடி தண்ணீர் தான் திறக்கப்படுகிறது. கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com