தமிழ்நாட்டில் 300 நியாயவிலைக் கடையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தக்காளி விலை கடந்த 10 நாள்களுக்கு மேலாக 1 கிலோ ரூ. 100-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி கூட்டுறவுத் துறையின் சாா்பில் தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடையில் மலிவு விலையில் தக்காளியை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 82 நியாயவிலைக் கடையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு 1 கிலோ தக்காளி ரூ. 60-க்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 300 நியாயவிலை கடைகளில் புதன்கிழமை முதல் (ஜூலை 12) தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் தக்காளி உற்பத்தி குறைந்திருப்பதுடன், வெளிமாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் கடந்த சில நாள்களாக கடும் விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.
ஆகவே, பொதுமக்களின் நலன் கருதி நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருளான தக்காளியை குறைவான விலையில் விற்பனை செய்ய அரசு சாா்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.