ராமேசுவரம்: இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடருவதால் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.
தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடருவதால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து அகதிகளாகத் தொடர்ந்து தனுஷ்கோடி வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் தனுஷ்கோடிக்கு 8 பேர் அகதிகளாக வந்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை ஆய்வாளா கனகராஜ் தலைமையில் அங்கு சென்ற போலீசார் 8 பேரையும் பாதுகாப்புடன் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
இதனையடுத்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மரியா(35), அபிலாஸ்(16), அபினாஸ்(14), ஜாக்சன்(8) மற்றும் விஜயகுமார்(50) அவரது மனைவி தர்ஷிகா(34), அஸ்நாத்(15), யோகேஷ்(11) ஆகியோர் என்பதும் விலைவாசி உயர்வு வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் அகதியாக தனுஷ்கோடி வந்ததாக தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.