நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மது போதையில் தகராறு செய்தவரை கயிறு கொண்டு கட்டி அடக்க முயன்றபோது கழுத்து இறுகி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி நகரிய காவல் சரகம், திடீர்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் கலியபெருமாள் மகன் ராமமூர்த்தி(37), கூலித்தொழிலாளி. முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம் செம்மங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகள் சந்தியா(27). இவர்கள் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் ராமமூர்த்தி நாள்தோறும் மது அருந்தி வந்து சந்தியாவை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சந்தியா கடந்த 2 மாதங்களாக செம்மங்குப்பத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் கணவர் ராமமூர்த்தி செம்மங்குப்பத்திற்கு மது போதையில் வந்து தகராறு செய்துள்ளார்.
இதையடுத்து, மனைவி சந்தியா, மாமனார் ராமமூர்த்தி ஆகியோர் நைலான் கயிறு கொண்டு ராமமூர்த்தியை கட்டி அடக்க முயன்றனராம். அப்போது, கழுத்து இறுகி கணவர் ராமமூர்த்தி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ராமமூர்த்தியின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக சந்தியா மற்றும் அவரது தந்தை ராமமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.