கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் பெறக் கோரி ஜூலை 25-இல் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

கர்நாடகத்திடமிருந்து ஜூன், ஜூலை மாதத்துக்குரிய தண்ணீரை பெற்று தரக் கோரி டெல்டா மாவட்டங்களிலுள்ள வட்டத் தலைமையிடங்களில் ஜூலை 25 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன்.

கர்நாடகத்திடமிருந்து ஜூன், ஜூலை மாதத்துக்குரிய தண்ணீரை பெற்று தரக் கோரி டெல்டா மாவட்டங்களிலுள்ள வட்டத் தலைமையிடங்களில் ஜூலை 25 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை தெரிவித்தது: நிகழாண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டது. பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டபோது, நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. ஒரு மாதம் கடந்த பின்பு தற்போது 75 அடிக்கு கீழ் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.  தற்போது உள்ள நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களுக்குதான் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்க முடியும் என்ற சூழல் உள்ளது. இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடைமடைப் பகுதிகளுக்கு முழுமையாகத் தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணையில் சுமார் 115 அடி தண்ணீர் இருந்தது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டு 35 நாட்களில் நீர்வரத்து வெறும் 200 கனஅடிக்குள்தான் உள்ளது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியிருந்தாலும் காவிரியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 2.9  டிஎம்சி தண்ணீர்தான் வந்தது. ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரும் வழங்காமல் உள்ளனர். இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிரைக் காப்பாற்ற காவிரியில் மாத வாரியாக கர்நாடகம் கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுத்தால்தான் காவிரி டெல்டாவின் சாகுபடியைப் பாதுகாக்க முடியும். 

குறிப்பாக, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொடுக்க வேண்டிய 122.57 டிஎம்சி தண்ணீர் மிக முக்கியமானது. எனவே டெல்டா மாவட்ட குறுவை சாகுபடியைப் பாதுகாக்க உடனடியாக கர்நாடக அணையிலிருந்து தண்ணீர் திறக்க கர்நாடகம் முன் வர வேண்டும். பருவ மழை பொய்த்திருந்தாலும், பற்றாக்குறை கால விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் விட வேண்டும். காவிரி நதிநீர் ஆணையமும், ஒன்றிய அரசும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டுவோம் எனக் கூறும் கர்நாடக அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள வட்டத் தலைமையிடங்களில் ஜூலை 25 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் சாமி. நடராஜன்.

அப்போது, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், தலைவர் பி. செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com