வள்ளியூரில் வழக்குரைஞரை அரிவாளால் வெட்டிய கூலிப்படையைச் சேர்ந்த இருவர் செய்யப்பட்டுள்ளனர்.
வள்ளியூரில் வழக்குரைஞரை செவ்வாய்க்கிழமை காலை அரிவாளால் வெட்டிய கூலிப்படையைச் சேர்ந்த இருவரை வழக்குரைஞரும், பொதுமக்களும் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வள்ளியூர் பாத்திமா கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ ஜெகன். இவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணிசெய்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் தனது அலுவலகத்தை திறந்துகொண்டிருக்கும் போது பின்னால் வந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் நீளமான கத்தியால் வழக்குரைஞர் ஜெகனின் தலையில் வெட்டினாராம்.
இதனை அடுத்து சுதாரித்துக்கொண்ட ஜெகன் அரிவாளால் வெட்டிய நபரை மடக்கி பிடித்துக் கொண்டாராம். இதனை அடுத்து அந்த பகுதியில் நின்றவர்களும் ஓடிவந்து அரிவாளோடு நின்றிருந்த மற்றொரு நபரையும் பிடித்து வள்ளியூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிக்க: உத்தமபாளையம் அருகே யானை மிதித்து விவசாயி பலி
இதனை ஆய்வாளர் ராஜூ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அரிவாளால் வெட்டிய பிரவின்ராஜ் மற்றும் கார்த்திக் இருவரும் மூன்றடைப்பு அருகே உள்ள பேரின்பபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.