புகார் அளிக்க நாயுடன் வந்த நபரால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் நாயை தெரு நாய்கள் கடித்ததால், அரசு தலைமை கால்நடை மருத்துவமனைக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போட தனது வளர்ப்பு நாயை கொண்டு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் கடந்த 4 மாதங்களாகவே மருத்துவமனையில் வெறிநாய்க்கடி தடுப்பூசி இருப்பு இல்லை எனக் கூறி அவரை திருப்பி அனுப்பி உள்ளனர். மேலும் தனியார் கால்நடை மருந்தகத்தில் இருந்து வெறிநாய்க்கடி தடுப்பூசி மருந்து வாங்கி வந்தால் நாய்க்கு ஊசி போடுகிறோம் என தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் தனது வளர்ப்பு நாயை தூக்கி கொண்டு சேலம் ஆட்சியர் அலுவலகத்தில், இது தொடர்பாக புகார் கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புகார் கொடுக்க வந்த முருகனை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி புகாரை மனுவாக கொடுக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து அவர் நாயுடன் தனது வீட்டிற்கு கிளம்பிச் சென்றார்.
இதையும் படிக்க: மணிப்பூர்: அந்த அக்கிரம நாளில் நடந்தது என்ன? நேரடி சாட்சியம்!
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசி மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனையில் இல்லை என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.