மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்ற பொறியியல் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் உதிரம் 2023 என்ற தலைப்பில் குருதிக் கொடை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் தினேஷ்குமார்(20) என்ற மாணவர் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பின்பு மேடையின் அருகே உள்ள கழிவறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஜூலை 27-ல் தஞ்சை வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.