திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு வரும் தேசிய புலனாய்வு முகமை குழுவினர் வெளியேற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, பொதுச் செயலர் கனி, நிர்வாகி பர்கிட் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விசாரணை நடைபெற்று வரும் நெல்லை முபாரக் வீட்டிற்குள் எஸ்டிபி கட்சியின் வழக்குரைஞர்களை அனுமதிக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதைத் தடுக்க நினைக்கும் பாஜகவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இது குறித்து எஸ்டிபி கட்சியின் நிர்வாகிகள் கூறுகையில், மேலப்பாளையத்தில் சுமார் 300 சதுர அடி மட்டுமே கொண்ட சிறிய இல்லத்தில் நெல்லை முபாரக் வசித்து வருகிறார். அவரது வீட்டில் 4 மணி நேரத்துக்கு மேலாக சோதனையிடுவதும், விசாரிப்பதும், அச்சுறுத்தும் வகையிலேயே உள்ளது. வழக்குரைஞர்கள் குழுவை கூட உள்ளே அனுமதிக்காதது, உள்நோக்கத்துடன் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு போட்டிருப்பது போல தெரிகிறது என்று குற்றம் சாட்டினர்.