விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை நடத்தினர்.
தஞ்சை மாவட்டம், திருபுவனம், மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக நகரச் செயலராகப் பொறுப்பு வகித்து வந்த இவர் அந்தப்பகுதியில் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டித்தார். இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள மேலும் சிலரை தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், தொரவி, பிரதானச் சாலையில் உள்ள அப்துல்லா மகன் பாபு என்பவரது வீட்டில் என். ஐ. ஏ.பிரிவைச் சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர். இந்தச் சோதனையானது சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. பாபு வெளியூரில் தங்கியுள்ள நிலையில் அவரது தாய் மற்றும் சகோதரர் ஒருவரிடம் விசாரணை நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.