புது தில்லி: வைன் மற்றும் ஜின் போன்ற மதுபானங்களின் விற்பனை ஒருபக்கம் அதிகரித்தாலும், இந்தியாவின் மதுபானச் சந்தை விற்பனையில் சக்கைப்போடு போடுவது என்னவோ விஸ்கிதானாம்.
அதுவும், விஸ்கி ஒரு பாட்டில் ரூ.750 என்ற அளவில் விற்பனை செய்யப்படும் நிலையில், மதுபானங்களின் விற்பனையில், அதுதான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது விற்பனைப் பட்டியல் புள்ளிவிவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
அண்மையில் வெளியான நாட்டில் விற்பனையாகும் மதுபானங்களின் பட்டியலின் அடிப்படையில், மொத்த மதுபான விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கு விற்பனையாவது விஸ்கி என்று தெரிய வந்துள்ளது. அதுவும், விற்பனையாகும் மொத்த விஸ்கியில் 85 சதவிகிதத்தை, உள்நாட்டில் தயாரிக்கப்படும் 10 நிறுவன மதுபானங்களே கோலோச்சுகின்றன என்கிறது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி விற்பனை 3.3 சதவிகிதமாக இருக்கும் நிலையில், இது 2027ஆம் ஆண்டு வாக்கில் 3.7 சதவிகிதமாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் வெளிநாட்டு விஸ்கிகளின் விற்பனை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு நிகராக உள்நாட்டு தயாரிப்பு விஸ்கிகளும் விற்பனையை தட்டித் தூக்கும் என்றும், அது 96 சதவிகிதமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கரோனா பேரிடர் காலத்துக்கு முந்தைய விற்பனை அளவை விஸ்கி எட்டிவிட்டதாகவும், அதுபோல, ஓட்காவும், விற்பனை விகிதத்தில் மிகப்பெரிய உயர்வுடன் 34 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் புள்ளிவிவரப் பட்டியல் தெரிவிக்கிறது.
உலகிலேயே மதுபான விற்பனை பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், அடுத்த ஐந்தாண்டுகளில் மதுபான விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 40 சதவிகிதம் அளவுக்கு மதுபான விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில், ஒயின் விற்பனையும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு சில விஸ்கி பாட்டில்கள் விற்பனை மட்டும் தொடர்ந்து அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.