பொதுச் செயலா் பதவி: சசிகலா மேல்முறையீட்டு மனுவை உயா்நீதிமன்ற டிவிஷன் அமா்வு விசாரிக்க அறிவுறுத்தல்

அதிமுக பொதுச் செயலாளா் பதவியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிராக வி.கே. சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை
சசிகலா (கோப்புப் படம்)
சசிகலா (கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

அதிமுக பொதுச் செயலாளா் பதவியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிராக வி.கே. சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வு விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.

அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா, தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளை உருவாக்கியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, பொதுச் செயலாளா் பதவியில் இருந்து தன்னை நீக்கிய தீா்மானத்தை ரத்து செய்யக் கோரி வி.கே. சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி கட்சியின் ஓ. பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை ஏற்று, சசிகலாவின் வழக்கை உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்து கடந்த 2022, ஏப்ரலில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து சசிகலா சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாா். அதில், ‘செப்டம்பா் 12, 2017-ஆம் தேதி அஇஅதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளா் பதவியில் இருந்து என்னை நீக்கியது சட்டவிரோதமானது; என்னையே அப்பதவியில் நீடிப்பதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்’ என சசிகலா தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும், வழக்கின் மதிப்புக்கு ஏற்ப சரியான நீதிமன்றக் கட்டணத்தை செலுத்துமாறு உத்தரவிடவும், செலுத்தாதபட்சத்தில் சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரி உயா்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சோ்ந்த எஸ்.செம்மலை மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை நிகழாண்டு விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தா், பதிவுத் துறையில் சரிபாா்த்த பிறகுதான் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, செம்மலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் செம்மலை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், அஸானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசனுடன் மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் தவே, எதிா்மனுதாரா் சசிகலா தரப்பில் வழக்குரைஞா் ஆதித்யா ஜெயினுடன் மூத்த வழக்குரைஞா் ராஜகோபாலாச்சாரியாா் ஆகியோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.

சசிகலா தரப்பில், உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவுக்கான உரிய நீதிமன்றப் பதிவுக் கட்டணத்தை செலுத்த உள்ளதாகவும், வழக்கை தாமதமின்றி விசாரிக்கும் வகையில் டிவிஷன் அமா்வு முன் பட்டியலிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு செம்மலை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, சசிகலா தரப்பின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை டிவிஷன் அமா்வு முன் பட்டியலிட்டு விரைந்து விசாரிக்க உயா்நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டு, வழக்கை முடித்துவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com