நெய்வேலி: என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர், என்எல்சி இந்தியா நிறுவன தலைமை அலுவலகம் முன்பு வியாழக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இச்சங்கத்தினர் புதன்கிழமை இரவு வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். அப்போது, வியாழக்கிழமை வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய பெருவெளியில் நடைபெறும் போராட்டத்தில் தொழிலாளர் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என அறிவித்தனர்.
அதன்படி, வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய பெருவெளியில் மற்றும் அதன் அருகாமையில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து என்எல்சி தலைமை அருகே 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்க சிறப்பு செயலர் எம்.சேகர் தலைமையில் என்எல்சி இந்தியா நிறுவன தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது எம்.சேகர் பேசுகையில், என்எல்சி நிர்வாகம் போராடும் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மறுக்கின்றனர் என்று அவர் கூறினார்.