உத்தமபாளையம்: தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சி மலைப்பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு என 7 மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதிக்கு சின்னமனூரிலிருந்து மகாராஜா மெட்டு வரை 52 கிலோமீட்டர் நெடுஞ்சாலை செல்கிறது.
இந்தநிலையில் புதன்கிழமை இரவு பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாத மரங்கள் நெடுஞ்சாலையில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது.
எனவே, சின்னமனூர் வனச்சரகத்தினர் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்தியுள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.