நெய்வேலி செல்கிறார் டிஜிபி சங்கர் ஜிவால்!
என்.எல்.சி.யைக் கண்டித்து பாமக நடத்திய போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நெய்வேலி செல்கிறார்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விரிவுபடுத்த விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்.எல்.சி. வெளியேற வலியுறுத்தியும் நெய்வேலியில் இன்று(வெள்ளிக்கிழமை) பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டதையடுத்து பாமகவினர் போலீசார் மீதும் போலீஸ் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இந்த கலவரத்தில் நெய்வேலி காவல்துறை ஆய்வாளர் உள்பட இரு தரப்பிலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
நெய்வேலி கலவரத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நிலவரம் குறித்து அறிந்துகொள்ள தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நெய்வேலி செல்கிறார்.
மேலும் இதுகுறித்துப் பேசிய அவர், நெய்வேலியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போலீசார் மீதும், போலீசார் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. பதட்ட சூழ்நிலை காரணமாக நெய்வேலியில் தற்போது 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.
இதையும் படிக்க | என்.எல்.சி.யைக் கண்டித்துப் போராட்டம்: அன்புமணி ராமதாஸ் கைது