
என்.எல்.சி. யைக் கண்டித்து நெய்வேலியில் பாமக இன்று முற்றுகைப் போராட்டம் நடத்திய நிலையில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. இந்தியா, நிறுவன சுரங்க விரிவாக்கப் பணிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விவசாய நிலங்கள் புதன்கிழமை கையகப்படுத்தப்பட்டன. அப்போது அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் அழிக்கப்பட்டன. இதைக் கண்டித்து விவசாயிகள், பாமகவினா் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | அமித் ஷா நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு!
இதன் தொடர்ச்சியாக, விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்.எல்.சி. வெளியேற வலியுறுத்தியும் நெய்வேலியில் இன்று(வெள்ளிக்கிழமை) பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. என்.எல்.சி. தனது நடவடிக்கையைத் தொடர்ந்தால் காலவரையற்ற சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி கூறினார்.
இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டத்தின் இடையே காவல்துறையினரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். மேலும் போலீசார் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டினர்.
பாமகவின் போராட்டத்தினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...