கிருஷ்ணகிரியில் பட்டாசு கடை வெடிவிபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனது பிரார்த்தனைகளும் எண்ணங்களும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின.
இதில் முதலில் 4 பேர் பலியாகினர். பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பட்டாசு வெடி விபத்தில் பலத்த காயமடைந்த அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் மேலும் 5 பேர் பலியாகினர்.
இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் ரவி, ஜெய்ஸ்ரீ, ருத்திகா, ருதிஷ், ராஜேஸ்வரி, இப்ராகிம், இம்ரான் ஆகியோர் இறந்துள்ளனர். இருப்பினும் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.