பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோயிலில் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புப் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பழனி மலைக் கோயிலில், கும்பாபிஷேகத்துக்கு முன்பு வரை, இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற அறிவிப்புப் பலகை இருந்தது.
பராமரிப்புப் பணியின்போது அகற்றப்பட்ட இந்தப் பலகை, மீண்டும் கோயிலுக்குள் வைக்கப்படவில்லை. இதற்கிடையே, இந்துக்கள் அல்லாத சிலர் கோயிலுக்குள் நுழைய முயன்றதால், சில வாரங்களுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. இதனால், சர்ச்சைக்குப் பிறகு மீண்டும் கோயிலுக்குள், இந்துக்கள் அல்லாதோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. இது குறித்து எதிர்மறை கருத்துகள் எழுந்ததால் பலகை மீண்டும் அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. இந்தியா பொருளாதார வல்லரசாவது சாத்தியமா?
இந்த நிலையில், அறிவிப்புப் பலகையை மீண்டும் வைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அறிவிப்புப் பலகையை அகற்றியது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், அறிவிப்புப் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, பழனி முருகன் கோயிலில் தேவையற்ற சர்ச்சையை உருவாக்க வேண்டாம் என்று கூறி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.