பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக்கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் அகரம் மார்க்கெட் தெருவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில், ரூ.6.32 கோடி மதிப்பில் 3 தளங்களுடன் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பின்னர், கொளத்தூர் தொகுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக்கூடாது. கல்வி எளிமையாக கிடைத்துவிடவில்லை. கல்விதான் நம் தலைமுறையையே உயர்த்துவதற்கான அச்சாரம். இதனால் திமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பெண்கள் கல்வி கற்க வேண்டியது மிக அவசியம். அதனால், அதில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது. புதுமைப் பெண் திட்டம் என்ற பெயரில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
நான் மாநிலத்துக்குத்தான் முதல்வர். கொளத்தூருக்கு எம்.எல்.ஏ.தான். எவ்வளவு பணி இருந்தாலும் கொளத்தூர் தொகுதி மக்களை வந்து பார்க்கும் போதுதான் ஒரு ஆற்றல் பிறக்கிறது எனக் குறிப்பிட்டார்.