

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானையை, களக்காடு வனப்பகுதியில் விட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானையை ஒரு மாதத்திற்கு பின் வனத்துறையினர் பிடித்தனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் சின்ன கனல் பகுதியில் மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
இந்த யானையை தமிழகத்தை ஒட்டிய கண்ணகி வனக்கோட்டம் அருகே கேரள வனப்பகுதி பெரியாறு புலிகள் காப்பகம் மலைப்பகுதியில் விட்டுச்சென்றனர்.
அதன் பின் கடந்த ஒரு மாதமாக தமிழக பகுதியான ஹை வேவிஸ் -மேகமலை, லோயர் கேம்ப், கம்பம் மற்றும் சண்முகா நதி அணை, பூசாரி கவுண்டன்பட்டி, பெருமாள் மலைப் பகுதிகளில் தொடர்ந்து சுற்றி வந்தது.
இதனை அடுத்து திங்கள்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பூசாரி கவுண்டன்பட்டி அருகே உள்ள பெருமாள் மலையில் 5 பேர் கொண்ட கால்நடை மருத்துவர் குழுவினர் மயக்க ஊசி செலுத்தி அரிக்கொம்பன் காட்டு யானையை பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட யானையை லாரி மூலம் கொண்டுச்சென்று களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதியில் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
களக்காடு மலைக் காட்டிலிருந்து இருந்து 1 மணி நேரத்தில் யானை கீழே ஊருக்குள் வந்துவிடும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் சாலைகளில் குவிந்த பொதுமக்கள், அரிக்கொம்பன் யானையை களக்காடு வனப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.