

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் மத்திய அரசு நமக்கு வஞ்சகம் செய்யும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இருந்து வியாழக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
ரயில்வே துறை வரலாற்றில் மிக கொடூரமான கோரமான விபத்து ஒடிசாவில் ஏற்பட்டது. இது தொழில் நுட்பக் கோளாறா அல்லது சதி வேலையா என்பது பிரச்சனைக்குரியதாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சதி வேலையாக இருந்தால் அதை செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ரயில் பயணம் ஆபத்தை உண்டாக்கும் என்ற பயத்தை உண்டாக்கியுள்ளது இந்த விபத்து. இதனை தீவிரமாக ஆய்வு செய்து உண்மை காரணத்தை கண்டுபிடித்து, அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என 12 ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்தினேன். அப்போதே அணைக்கட்டியே தீருவோம் என சொல்லி, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்து விட்டனர்.
இதனை மத்திய அரசு வேடிக்கை பார்க்கும். இது தமிழ்நாட்டுக்கு பெரும் கேடாக முடியும். கபினி, கிருஷ்ணராஜ சாகரில் இருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும். மத்திய அரசு இதில் நமக்கு வஞ்சகம் செய்யும். ஒடிசா ரயில் விபத்தில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு அமைச்சர்கள், அதிகாரிகளை அனுப்பி வைத்து அங்கிருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தது பாராட்டுக்குரியது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.