
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பிராய்லர் கோழி ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து, சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
தஞ்சாவூரிலிருந்து, காரைக்காலுக்கு பிராய்லர் கோழிகளை ஏற்றிக் கொண்டு திருவாரூர் நோக்கி வேன் ஒன்றுசென்று கொண்டிருந்தது.
மன்னார்குடியில் கோழியை இறக்கி விட்டு, கொரடாச்சேரி காவல் சரகத்திற்கு உட்பட்ட திருவாரூர் - மன்னார்குடி, சாலையில் பெருந்தரக்குடி ஊராட்சி, மேப்பளம் சுடுகாடு வளைவு அருகில் வேன் வந்துள்ளது. அப்போது, ஒட்டுனரின் தூக்கக் கலக்கத்தில், நிலை தடுமாறிய வேன் இன்று அதிகாலை 3.45 மணிக்கு, சாலையோர பனை மரத்தில் மோதியுள்ளது.
தலைகீழாக கவிழ்ந்து வண்டியின் மேல் பகுதியில் அமர்ந்திருந்த லோடுமேன்களான, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, சௌரப் மஜீ (25) மற்றும் நோபோ மஜீ (30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
மேலும், வாகன ஓட்டுனர் புதுக்கோட்டை, அறந்தாங்கி, கலக்கமங்கலத்தைச் சேர்ந்த கலைமணி என்பவரது மகன் கலையரசன் (28) மற்றும்
மேற்பார்வையாளர் ஆகிய இருவரும் சிறிய காயத்துடன் தப்பினர்.
கொரடாச்சேரி காவல் துறை ஆய்வாளர் சசிகலா, உதவி ஆய்வாளர்கள் பக்கிரிசாமி, வேல்முருகன் மற்றும் காவல் துறையினர், விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு, சௌரப் மஜீ மற்றும் நோபோ மஜீ ஆகியோரது உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொரடாச்சேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.