என்எல்சி ஊழியர் வீட்டில் நகைகள் திருட்டு
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே என்எல்சி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
நெய்வேலி அடுத்துள்ள வடக்குத்து ஊராட்சி, சீனிவாசா அவன்யூ 2-இல் வசித்து வருபவர் கந்தசாமி மகன் வேல்முருகன் (62). இவர் ஓய்வு பெற்ற என்எல்சி இந்தியா நிறுவன ஊழியர். இவரது மனைவி கலாவதி, துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு சனிக்கிழமை இரவு வந்தார்.
இவரை அழைத்து வருவதற்காக வேல்முருகன் வீட்டை பூட்டிக்கொண்டு சனிக்கிழமை சென்னை விமான நிலையம் சென்ற அவர், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 வெள்ளி விளக்குகள் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்