துறையூர்: பச்சமலை மங்களம் அருவியில் குளித்த போது தவறி விழுந்த
இருவர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
ஊட்டியைச் சேர்ந்த ரா. நிஷாந்த்(24), ஜா. தமீம்(23), ஜெ. ஜெஸ்டின்(23), துறையூர் அருகே தா.பேட்டையைச் சேர்ந்த கு. ஆர்த்தி ஆகிய நான்கு பேரும் பச்சமலையில் பெரிய மங்களம் கிராமத்திலுள்ள மங்களம் அருவிக்கு வியாழக்கிழமை சென்றனர். அங்கே நிஷாந்த், தமீம், ஜெஸ்டின் ஆகியோர் அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது வழுக்கி விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த தமீம், ஜெஸ்டீன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். உடன் சென்ற ஆர்த்தி அருகில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை உதவிக்கு அழைத்து நிஷாந்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். அங்கு அளிக்கப்பட்ட முதலுதவிக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு நிஷாந்த் அனுப்பப்பட்டார். இது தொடர்பாக தகவலறிந்து தம்மம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர். உயிரிழந்த இருவரின் சடலங்களை போலீஸார் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பினர்.