

மதுரை: டி.ஆர். பாலு தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக உள்ளேன் என தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரையில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள விடியோ உரையானது மாநில முதல்வருக்கான வரம்பை மீறியதாக உள்ளது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்குப் பின்னரான முதல்வரின் நடவடிக்கைகள், அவரது பதவிக்கு உகந்ததாக இல்லை. மிரட்டினால் பாஜகவினர் அஞ்சிவிடுவர் என முதல்வர் நினைத்தால் அது தவறு.
தமிழகத்தில் பாஜக முன்பிருந்த நிலையில் இல்லை என்பதை அவர் உணர வேண்டும்.
தனது மருமகனுக்கும், அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றார் முதல்வர். ஆனால், அமலாக்கத் துறை விசாரணையில் உள்ள ஒருவரை, முதல்வரின் மருமகன் சென்று சந்தித்திருப்பது எப்படி? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர்.
சென்னை மெட்ரோவில் 2009 - 2011ம் ஆண்டு வரையிலான காலத்தில் ரூ. 200 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து பாஜக ஏற்கெனவே மத்தியப் புலனாய்வு பிரிவில் புகார் அளித்துள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணையைத் தொடங்கினால், முதல்வர் மீது கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும்.
அதற்கு அஞ்சியே தமிழகத்தில் மத்தியப் புலனாய்வு பிரிவு நேரடியாக விசாரணை மேற்கொள்ளும் அனுமதியை முதல்வர் ரத்து செய்துள்ளார்.
டி.ஆர். பாலு தொடர்ந்த வழக்கில் வருகிற ஜூலை 14-ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக உள்ளேன் என்றார் அண்ணாமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.