பாலியல் புகார்: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை!

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, விழுப்புரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
முன்னாள் சிறப்பு  டிஜிபி ராஜேஷ் தாஸ்
முன்னாள் சிறப்பு  டிஜிபி ராஜேஷ் தாஸ்
Updated on
1 min read


விழுப்புரம்: பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, விழுப்புரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு  டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) ராஜேஷ் தாஸ் மீது புகார் அளிக்கச் சென்ற  பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி.கண்ணன் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் 2021-ஆம் ஆண்டில் வழக்குப் பதிந்தனர். 

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2021, ஜூலை மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதும், முன்னாள் எஸ்.பி.கண்ணன் மீதும் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர். சுமார் 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இதில், முன்னாள் தலைமைச் செயலர், முன்னாள் உள்துறைச் செயலர், சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி என 68 அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் எதிர் தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சாட்சியங்கள் அளித்த தகவலின்படி முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகிய இருவரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு இருவரும் பதிலளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அரசு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வாதங்கள் முடிவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி எம்.புஷ் பராணி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, ஜூன் 12 ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜரானார். செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி ஆஜராகவில்லை. 

தொடர்ந்து அரசுத்தரப்பு வழக்குரைஞர் வைத்தியநாதன் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தார். 

அவரைத் தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்குரைஞர் ரவீந்ததிரனும், முன்னாள் எஸ்.பி. தரப்பு வழக்குரைஞர் ஹேமச்சந்திரன் ஆகியோர் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தனர்.

வழக்கில் அனைத்து விசாரணையும் நிறைவு பெற்றதாக அறிவித்த நீதிபதி எம். புஷ்பராணி, ஜூ ன் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 10.50 மணிக்கு நீதிபதி எம்.புஷ்பராணி தீர்ப்பளித்தார். இதில், முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com