
ராணிப்பேட்டை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற வாரச்சந்தைகளில் ராணிப்பேட்டை வாரச் சந்தையும் ஒன்று. இச்சந்தையில் காய்கறிகள், கோழி, ஆடு, மாடு உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனையாகும் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திரத்தில் இருந்தும் வியாபாரிகளும், பொதுமக்களும் இச்சந்தைக்கு வருவது வழக்கம்.
ராணிப்பேட்டை வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வந்த ஆடுகள்
இச்சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும். இந்த வாரச்சந்தையில் பல லட்சம் மதிப்பில் வியாபாரம் நடைபெறும். மேலும் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், பக்ரீத், பொங்கல் ஆகிய பண்டிகைகளின்போது இச்சந்தையில் காய்கறிகள், கோழி, ஆடுகள் விற்பனை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்.
இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை வரும் 29 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், சிறப்பு சந்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆடுகளின் விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் அமோகமாக நடைபெற்றது. அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாகக் காணப்பட்டது. இதில் கன்னி, கருப்பு, நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 4,000 ஆடுகள் வரை விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன. ஆடு ஒன்று குறைந்தபட்சம் ரூ. 13 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ. 40 ஆயிரம் வரை விலைபோனது.
அதன்படி, சுமார் ரூ.2 கோடிக்கு மேல்ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்த ஆண்டு ஆடுகள் விற்பனை ஆமோகமாக இருந்ததால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.