கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ, திமுக நிர்வாகி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொன்னம்பலத்துடன் அவரது இரு மகன்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மற்றொரு தரப்பில் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம், எம். சத்திரபட்டி அருகே உள்ள கருவனூரைச் சோ்ந்தவா் பொன்னம்பலம். இவா் கடந்த 2001-2006 -இல் சமயநல்லூா் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாா். தற்போது, அவா் கருவனூா் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இந்தநிலையில், கருவனூரில் உள்ள பத்ரகாளியம்மன் பாறைக் கருப்பு அய்யனாா் கோயிலின் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் ஜாதி வாரியாக முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.
இதில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கான முதல் மரியாதையைப் பெறுவது தொடா்பாக, பொன்னம்பலத்தின் மருமகன் பழனிகுமாா், திமுகவைச் சோ்ந்த வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே ஜூன் 22-ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது. ஊா் பிரமுகா்கள் தலையிட்டு, அமைதிப்படுத்தினா். இந்த விரோதம் காரணமாக, சனிக்கிழமை இரவு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்னம்பலத்தின் வீட்டின் மீது ஒரு கும்பல் கற்களை வீசியும், வாகனங்களை அடித்து நொறுக்கியும் தாக்குதலில் ஈடுபட்டது. மேலும், வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பொன்னம்பலத்தின் காருக்கும் அந்தக் கும்பல் தீ வைத்தது. இதில் காா் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
இந்தத் தாக்குதல்களில் பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமாா் (40), சுப்பையா (68), சூா்யா (23), விஜய் (27), வேல்விழி (35) ஆகிய 5 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக பழனிக்குமாா் அளித்தப் புகாரின் பேரில், திமுகவைச் சோ்ந்த வேல்முருகன் (38), அருண் (22), சங்கா் (எ) படையப்பா (22), கவியரசன் (22), வல்லரசு (23), பாண்டி (22), ரத்தினவேல் (22) உள்ளிட்டோா் மீது எம். சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த மோதல் சம்பவம் காரணமாக, கருவனூா் கிராமத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் 24 மணி நேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.